9.15.2006

நீங்கள் மகத்தானவர்

வெண்மணல் படர் வெளிகளைப் பார்க்கையில்
இன்னும் வாராத நதிகளையிட்டு
வருத்தம்கொள்கிறீர்கள்
காதுகுடையும் பஞ்சு, மஞ்சள் துணி, பூ
இன்ன பிறவிற்கும்
குழந்தைகளின் சின்னக்குரலும் கெஞ்சலும்
போகுமிடங்களெல்லாம்
நிழல்போல் நீள்கிறது
கைக்குழந்தைப் பிச்சைக்காரிக்கு இடநினைத்து
தயக்கத்தில் தங்கிவிட்ட ஐந்துரூபாய்த்தாள்
சட்டைப்பைக்குள் சுட்டுக்கிடக்கிறது.
கடந்தவாரம் ஏழாம் மாடியிலிருந்து
தன்னை வீசியெறிந்து
கணவனை வெற்றிகொண்டவளுக்காக
விழிக்கடையோரத்தில் அரைத்துளி நீரும்
சிலநொடி மௌனமும் படர
உணவுச்சாலையில்
மதுக்குவளையை உயர்த்துகிறீர்கள்.
வெற்றுக்காணிகளைக்
கழிப்பறையாக்குபவர்களின் சங்கடமே
உங்களதும் நண்பர்களதும் இன்றைய பேசுபொருள்.
‘கவிவெளியில் ஆணாதிக்கம்’
நாளை ஆற்றவேண்டிய சிறப்புரையை
மனதுள் நிகழ்த்தியபடி
நெடுஞ்சாலையில் விரையும்போது
நாசியில் மோதுகிறது
விற்காமல் இலைகளில் சுருண்ட
பூக்களின் வாசனை ‘பாவம் பூக்காரி’
கடை வாசல்களில்
கைகொண்டு மெய்பொத்தியுறங்கும் உருவங்கள்
பொதுவுடமை குறித்து வெறியேற்ற
நீங்கள்தான் எத்தகை மாமனிதராய்
வீட்டுக்குள் நுழைகிறீர்கள்.
தொலைவில் தெரிந்த
ஒவ்வொரு வெளிச்சப்பொட்டிலும் ஏமாந்தவள்
உறங்கிச் சில நொடிதான்.
கோடை இரவு நீண்ட நேரமாக உலர்த்திக்கொண்டிருக்கிறது
வாயில்மறை திரைத்துணியின் சமையலறைப் பிசுக்கை.
~0~

No comments: