5.02.2009

“ஏண்டா தந்தி அனுப்புறீங்க… அதை வாங்கி ………… த் துடைச்சிட்டுப் போட்டுறுவானுங்க”


30.04.09 அன்று சென்னை சேப்பாக்கத்தில், தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்ட உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு பல பிரபலங்களும் ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி.

‘மண்மொழி’சஞ்சிகையின் ஆசிரியர் இராசேந்திர சோழன்:

நாங்கள் எட்டுக்கோடித் தமிழர்கள் இருந்தும், தங்கள் தாயகத்திற்காகப் போராடும் சகோதரர்களை கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மாநில அரசாங்கம் டெல்லி ஆட்சியாளர்களுக்கு கொத்தடிமைகள்போல நடந்துகொள்வதனால் வந்த வினை. தமிழ்நாட்டுக்கென்று ஒரு இராணுவம் இருந்திருந்தால் நாங்கள் இப்படி மனம்நொந்துபோயிருக்க வேண்டியிராதல்லவா? தங்கள் உரிமைகளை வென்றெடுக்கப் போராடிய அங்கோலா, கொரியா, தென்னமெரிக்கா எல்லாவற்றுக்கும் பின்புலமாக, பலமாக சில நாடுகள் இருந்தன. இளைப்பாற, ஆதரவும் ஆயுதமும் கொடுக்க நாடுகள் இருந்தன. ஆனால், ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய தமிழகத் தமிழர்களின் பிரதிநிதியாகிய மாநில அரசாங்கம் நயவஞ்சக நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறது. இலங்கை அரசாங்கம் என்ற கொலைஞர்களுக்கு மத்திய அரசு நேரடியாகவே இராணுவ உதவி செய்துவருகிறது.

சீனம், பூட்டான், பங்களாதேஷ், பாகிஸ்தான் இன்னபிற நாடுகளுடன் இந்தியா எவ்விதமான வெளியுறவுக்கொள்கையைக் கடைப்பிடிக்கிறது? சீனாவைப் போட்டி நாடாக, அச்சுறுத்தும் நாடாகப் பார்க்கிறது. பாகிஸ்தானைப் பகைநாடாகப் பார்க்கிறது. நேபாளம், பூட்டான், மாலைதீவுகள் இவற்றையெல்லாம் தமக்குக் கட்டுப்பட்ட நாடுகளாகப் பார்க்கிறது இந்தியா. ஆனால், இலங்கை மட்டும் இந்தியாவுக்குக் கட்டுப்படாது. நேரடியாக எதிர்க்கவும் எதிர்க்காது. அதேசமயம், கட்டுப்படவும் செய்யாது. ஆகவே, இலங்கையை இந்தியா தனது செல்லப்பிள்ளையாகப் பார்க்கிறது.
சீனாவுக்கு, பாகிஸ்தானுக்கு தனது ஒரு அங்குல மண்ணைக்கூட விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று சொல்லும் இந்தியா, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உரித்தான கச்சதீவை இலங்கைக்குத் தாரைவார்த்துக்கொடுத்திருக்கிறது. அங்கே இருக்கும் வழிபடுதலங்களுக்கு எம்மவர்கள் செல்லமுடியாது. மீனவர்கள் வலைகளை உலர்த்தவும் களைப்பாறவும் முடியாது.

பாகிஸ்தானைப் பலவீனப்படுத்த கிழக்குப் பாகிஸ்தானை விடுவித்துக்கொடுக்க முயன்றது இந்தியா. அந்நேரம், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா பேசியது. “இது எங்கள் அயல்நாட்டுப் பிரச்சனை”என்று அமெரிக்காவுக்குப் பதிலளித்து, அதற்காகப் போராடி, வங்காளதேசம் என்றொரு நாடு உருவாக முதற்காரணியாகியது இந்தியா.

அதே ஜனநாயக அடிப்படையில் தமிழ்மக்களுக்கு விடுதலை வாங்கிக்கொடு என்று நாங்கள் கேட்கவில்லை. “நீ ஏன் கொலைவெறி இராணுவத்துடன் இணைந்து எங்கள் சகோதரர்களைக் கொன்று குவிக்கிறாய்?”என்றுதான் கேட்கிறோம். இந்திய இராணுவத்தினரது சம்பளம், இராணுவச் செலவினம் எல்லாவற்றிலும் தமிழ்நாட்டு மக்களது வரிப்பணமும் இருக்கிறது. எங்கள் மக்களின் வரிப்பணத்தை எடுத்து எங்கள் மக்களையே கொல்வது எவ்வகையில் நியாயம்?

‘தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நீங்கள் ஏன் தடைவிதிக்கவில்லை?’என்று திருமதி. சந்திரிகா பண்டாரநாயக்காவிடம் ஒரு செவ்வியொன்றில் பத்தாண்டுகளுக்குமுன் கேள்வி எழுப்பப்பட்டது. “இலங்கையில் மூன்றில் ஒரு பகுதியைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் விடுதலைப் புலிகளைத் தடைசெய்துவிட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தைக்குப் போய் இப்பிரச்சனையைத் தீர்ப்பதெப்படி?”என்று அவர் பதில்கேள்வி எழுப்பினார்.
அப்படிப் பரந்து விரிந்திருந்த நிலப்பகுதி இன்றைக்குச் சுருங்கிவிட்டது. அதற்குத் துணைபோனது இந்திய அரசு. தமிழர்களுக்கு முதல் எதிரி சிங்கள இனவெறி அரசாங்கம் என்றால், இரண்டாம் எதிரி இந்திய அரசு. அதற்குப் பழிதீர்க்கும் நிகழ்வு ஒருநாள் நடந்தே தீரும்.

‘பிரிவினைக்குத் தூண்டுகிறார்கள்.. தூண்டுகிறார்கள்’என்று கூச்சலிடுகிறார்களே… அப்படித் தூண்டுவது சோனியா காந்தியும் மன்மோகன்சிங்கும்தான். தமிழனுக்கு இப்படி இன்னல் விளைவித்தால் எங்கள் நெஞ்சம் குமுறாதா? பிரிவினை எண்ணம் வராதா? அழிவுக்குத் துணைபோகும் காங்கிரசுக்கு கலைஞர் காவடி தூக்குகிறார். அவர்களுக்கு முண்டுகொடுப்பதை நிறுத்த அவர் ஏன் தயாரில்லை?

ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசுவது குற்றமென்றால், பங்களாதேசின் விடுதலைப் போராட்டத்துக்குத் துணைபோனது குற்றமில்லையா? இறையாண்மைக்கு விரோதம் இல்லையா? அன்று ஜெயலலிதா சொன்னதற்கு அந்தக் குதி குதித்தவர்கள், இன்று அவர் தமிழீழத்திற்கு ஆதரவாகப் பேசும்போது மௌனம் சாதிப்பது ஏன்? அதை வழிமொழிய உங்களால் ஏன் முடியவில்லை?

இங்கே தமிழகம் என்ற மாநிலத்திலே குடும்ப ஆட்சி தொடரவேண்டுமென்பதற்காகவே அநியாயங்களைத் தட்டிக் கேட்காமல் தட்டிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். அதனால்தான் அங்கே அத்தனை படுகொலைகள் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. இங்கே இப்படியென்றால் இலங்கையிலும் குடும்ப ஆட்சிதான். கோத்தபாய ராஜபக்சே, பசில் ராஜபக்சே இப்படியாக. இவர்களின் சகோதரி ஒருவர் நிருபமா ராஜபக்சே என்பவர் தமிழகத்துக்கு வந்து தனது சகோதரர்களின் நலன்களுக்காக கோயில் கோயிலாகச் சுற்றுகிறார். தமிழனை அழிக்க தமிழக சாமிகளை வரம் கேட்டுப்போகிறார்.

‘இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன்முதலாக’நான்கு தொலைக்காட்சிகளும் ஒரே காட்சியை ஒளிபரப்பிக்கொண்டிருந்த வினோதத்தை நாம் பார்த்தோம். அந்த வரலாற்று நிகழ்ச்சி, கலைஞரின் உண்ணாவிரதக் காட்சி.

கிராமங்களில் ஒன்று சொல்வார்கள்: “ஏண்டா தந்தி அனுப்புறீங்க… அதை வாங்கி சூத்தைத் துடைச்சிட்டுப் போட்டுறுவானுங்க”என்று. அதுதான் மத்திய அரசாங்கத்துக்கு மாநில அரசாங்கத்தால் அனுப்பப்படும் தந்திகளுக்கு நடக்கின்றன போலும். பிரணாப் முகர்ஜி தமிழகத்துக்கு வந்திருந்தபோது, கலைஞரோடு கனிமொழி, மு.க.ஸ்டாலின் என்றொரு குடும்பக் கூட்டமே நடந்தேறியதைப் பார்த்தோம்.
பிரியங்கா நளினியை வந்து பார்த்தார்; அனுதாபப்பட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். அவர் வந்து பார்த்தது கருணையினால் அல்ல. நளினியின் வாயைக் கிளறி வேறு ஏதாவது செய்திகள் அகப்படுகின்றனவா என்று அறிந்துபோகவே வந்தார். அவர் வந்து போனபிறகுதான் தமிழர்கள் மீது தாக்குதல்கள் அதிகப்படுத்தப்பட்டன. சிவசங்கர மேனனும் எம்.கே.நாராயணனும் கொழும்புக்குப் போய் ‘சண்டையை நிறுத்து’என்று சொல்லிவிட்டு வந்தபிற்பாடுதான் அகோரமான எறிகணை வீச்சு வன்னிப்பகுதியில் ஆரம்பித்திருக்கிறது. பாதுகாப்பது போல காட்டிக்கொண்டு அழிப்பதற்குச் சூழ்ச்சி செய்கிறார்கள்.

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்காதீர். தமிழீழ விடுதலைக்கு ஆதரவளிப்பவர்களுக்கு வாக்களியுங்கள். எவ்வளவு ஒரு அரிய சந்தர்ப்பத்தை, இணைந்து போராட்டம் நடத்தவேண்டிய காலகட்டத்தை இந்த அரசியல் கட்சிகள் தமது சுயநலங்களின்பொருட்டு பாழ்படுத்திவிட்டன. இப்போதும் மக்களாகப் பார்த்து ஏதாவது செய்தாக வேண்டும். ஆறரைக்கோடி தமிழர்கள் என்று கூவிக்கொண்டிருக்கிறோம் நாம். ஒரு ஐந்து இலட்சம் தமிழர்கள் வீதிகளில் அமர்ந்து எமது சகோதர்களுக்காக ஒன்றாகப் போராடினால் அரசு என்ன செய்யும்? எல்லாம் இயக்கமற்றுப் போகும் ஒரு சூழலில் அவர்கள் நடவடிக்கை எடுத்துத்தானே ஆகவேண்டும்?

விடுதலைப் புலிகள் பின்னடைந்து விட்டார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நியாயமான விடுதலைப் போராட்டங்கள் தோற்றதாக வரலாறு இல்லை.


கவிஞர் பா.ராமச்சந்திரன்

இன்று இரண்டு சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். ஒன்று தேர்தல். மற்றையது ஈழச்சிக்கல். இரண்டும் இன்றைக்கு ஒன்றாகக் கலந்துவிட்டன. ஏறக்குறைய தமிழீழம் அடைந்துவிட்டோம் என்று சொல்லத்தக்க நிலையில் விடுதலைப் போராட்டம் நின்றுகொண்டிருந்தது. எப்படியோ கையாண்டிருக்கவேண்டிய விடயத்தை கலைஞர் சீர்குலைத்துவிட்டார்.

இதில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்புகிற பிரதிநிதிகள் எவரையும் தமிழர்களாக அல்லாமல் வேற்று மொழிக்காரர்களாகப் பார்த்து மத்தியிலே இருக்கிற காங்கிரஸ் அரசு அனுப்பிக்கொண்டிருக்கிறது. இதைச் செய்துகொண்டிருப்பவர் சோனியா காந்தி. பஞ்சாபியர்களுக்கு ஏதாவது அனர்த்தம் நிகழ்ந்தால் மத்திய அரசு அதைத் தீர்க்க ஆவன செய்யும். குஜராத்தியர்களுக்கு நடந்தால் கொதித்தெழும். ஆனால், தமிழர்களுக்கு நடக்கும்போது பாராமுகமாக இருக்கும். இதுதான் நம்மை ஆளும் அரசாங்கத்தின் பாரபட்சமான முகம்.

இலங்கையிலே நடந்துகொண்டிருப்பது போரல்ல; இனப்படுகொலை. இந்நிலையில் கலைஞர் காலை ஐந்தரை மணிக்கு அண்ணா சமாதியருகில் போய் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து மதியம் பன்னிரண்டு மணிக்கு அதை முடித்துவிட்டுத் திரும்புகிறார். கேட்டால் கையறு நிலையாம். ஒன்றரைக்கோடிப் பேர்களே இருக்கக்கூடிய சிங்களவர்களுக்குத் தலைமை தாங்குகிற ராஜபக்சே எம்மை எள்ளி நகையாடி கைகொட்டிச் சிரிக்கிறான். உலமெல்லாம் பரந்து பத்துக்கோடி தமிழர்கள் இருக்கிறோம். தமிழகத்தின் மக்கள் பிரதிநிதியாக இருக்கிற முதலமைச்சருக்கு கையறு நிலையாம். அவருக்குப் பதவியைப் பற்றிக் கவலை. எங்களிடம் தூக்கியெறிவதற்குப் பதவிகள் இல்லை.

இலங்கையில் தனிநாடு அமைந்தால், தமிழ்நாட்டிலும் அப்படிக் கேட்போம் என்று சொல்வது தவறு. வடநாட்டில் தமிழனுக்கு உரித்தான எத்தனையோ இருக்கின்றன. நாம் ஏன் பிரித்துவிடு என்று கேட்கப்போகிறோம்.
இலங்கை என்றைக்கு இந்தியாவுக்குச் சார்பாய் நடந்துகொண்டிருக்கிறது. அப்படி ஒரு வரலாறே இல்லை.

ஆயுதத்தைக் கையில் வைத்திருப்பதனால் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகிறீர்களே… அந்த ஆயுதம் எங்கிருந்து வந்தது? அது அவர்களுடைய கைகளில் திடீரென முளைக்கவில்லை. தரப்படுத்தல் போன்ற காரணங்களால் அவர்களது கைகளில் ஆயுதங்களைத் திணித்தவர்களே (அரசாங்கம்) நீங்கள்தானே…! மக்கள் யாரைப் பின்தொடர்கிறார்களோ, யாருடைய வார்த்தையை வழிமொழிகிறார்களோ, யாரை நம்பியிருக்கிறார்களோ.. அவர்கள்தான் உண்மையான தலைவர்கள். நீங்களெல்லாம் பெரிய பொய். பதவிக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கிறவர்கள்.


ஒன்றுமே செய்யாமல் காங்கிரஸாரின் கால்களைப் பிடித்துக்கொண்டு, “ஈழம் அமைந்தால் மகிழ்வேன்”என்பது எவ்வளவு பெரிய வேடிக்கை! ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துகொண்டு “உணவு அனுப்பினேன்; உடைகள் அனுப்பினேன்; தந்தி அனுப்பினேன்”என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் வெட்கம்! கலைஞரே! உங்கள் உண்ணாவிரதத்தை மக்கள் கேலிசெய்கிறார்கள். நீங்கள் உண்ணாவிரதம் இருக்காதீர்கள். ஒன்றும் செய்யமுடியாதவருக்கு எதற்குப் பதவி? ‘கையறு நிலை… கையறு நிலை’என்று ஏன் புலம்பிக்கொண்டிருக்கிறீர்கள்? சோனியாவின் ஏவலாளியாக இருப்பதற்கு வெட்கப்படுங்கள்.


ஓவியர் புகழேந்தி

தமிழீழப் போராட்டமும், தமிழீழ மக்களும் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள். எங்களால் நிம்மதியாக உண்ணவோ உறங்கவோ முடியவில்லை. கொத்துக் குண்டுகளைப் போட்டுக் கொல்கிறார்கள். சதைப்பிண்டங்களாகவும், தலையற்ற முண்டங்களாகவும் இரத்தச் சகதியில் எமது சொந்தங்கள் கிடப்பதைப் பார்த்து கண்ணீர் வடிக்கின்றோம்.
உலகத்தின் கவனம் நமது போராட்டத்தின்மீது திரும்பியிருக்கிறது. புலம்பெயர்ந்து உலகெங்ஙணும் பல நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள் அந்தந்த நாடுகளில் ஆட்சியிலுள்ளவர்களின் கவனத்துக்கு இந்தப் போராட்டத்தின் நியாயப்பாட்டை எடுத்துச்சென்றிருக்கிறார்கள். கொட்டும் பனியிலும் கொதிக்கும் வெயிலிலும் போராடி, உலகத்தின் கவனத்தை இந்த மனிதப் பேரழிவின்பால் திருப்பியிருக்கிறார்கள்.

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ மக்களுக்கும் இடையிலான போராட்டமாக இதைப் பார்க்கமுடியாது. இது அண்ணன் பிரபாகரனுக்கும் உலகத்திற்குமிடையிலான போராக விரிவடைந்திருக்கிறது. ஒபாமா உள்ளிட்ட உலகத் தலைவர்களது கவனம் நமது மக்கள் போராட்டத்தின்பால் திரும்பியிருக்கிறது. உண்மையில் நமது களம் விரிந்திருக்கிறது. போராட்டம் உன்னதமான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. இது வென்றே தீரும். உண்மையான, நியாயப்பாட்டோடுகூடிய விடுதலைப் போராட்டத்தை யாராலும் மழுங்கடித்துவிடமுடியாது. நாம் ஒருக்காலும் தோற்றுப்போய்விட மாட்டோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் என்று மட்டும் இதைப் பார்க்கக்கூடாது. ‘நமக்கென்றொரு நாடு’என்ற உணர்வு எல்லோருக்குள்ளும் வரவேண்டும். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் இதை மக்கள் போராட்டமாகப் பரிணமிக்கச் செய்திருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தின் திறவுகோல் தமிழ்நாட்டில்தான் இருக்கிறதென்று இதுகாறும் நாங்கள் நம்பினோம். ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் அதைச் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆறரைக் கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் ஏன் போதியளவு எழுச்சி ஏற்படவில்லை? உலகத்தைத் திரும்பிப் பார்க்கும்படியான போராட்டங்களை நாம் நடத்தியிருக்கவேண்டும்.

மாபெரும் தத்துவங்களாகச் சொல்லப்படும் மாவோயிசம், கொம்யூனிசம், சோஷலிசம் போல ‘பிரபாகரனிஸம்’என்று ஒன்று இன்றைக்கு உருவாகிக்கொண்டிருக்கிறது.

நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகளாகத் தொடர்ந்தும் இருக்கவேண்டுமென மத்திய அரசாங்கம் எதிர்பார்க்குமானால், இந்தத் இனவழிப்பைத் தடுத்துநிறுத்தவேண்டும். ஒருவகையில் பார்த்தால் தமிழ்நாட்டு மக்களை சரியான நிலையில், சரியான திசையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது ஈழவிடுதலைப் போராட்டம்.


கூட்டத்தை ஒழுங்கமைத்து நடத்திக்கொண்டிருந்தவர் சொன்னார்:

பலர் வியட்னாம் விடுதலைப் போராட்டத்தோடு ஈழவிடுதலைப் போராட்டத்தை ஒப்புநோக்கிப் பேசுகிறார்கள். ஆனால், அதன் பின்;னால் சீனா போன்ற பலம் பொருந்திய நாடுகள் பின்புலமாக, பக்கபலமா நின்றன. தமிழீழ மக்களின் போராட்டத்துக்கு உதவி செய்ய யாருமே இல்லை.


கவிஞர் கருப்பண்ணல் (பெயர் சரியாக காதில் விழவில்லை)

“பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு”
கருணாநிதி செத்துபோனவர். அவரைப் பற்றி இங்கு எதற்குப் பேசுகிறீர்கள்? கலைஞர் மிக அழகான நாடகம் ஒன்றை ஆடியிருக்கிறார். அதுவும் எங்கே? அண்ணா சமாதியின் முன்னால்.


இதனிடையில் மின்சாரம் தடைப்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்துக்கு எரிக்கும் வெயிலைப் பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தோம்.


(இன்னும் இருக்கிறது)
பதிவு நினைத்ததுபோலில்லை. நீண்டுகொண்டே போகிறது.

2 comments:

தா.பாண்டியன் said...

எதிர்வரும் 13ந்திகதி சோனியாவுடன் கருணாநிதி உடன்கட்டை ஏறும்போது கொள்ளி வைப்பவர் திருமாவளவன்

பதி said...

பாராட்டுக்கள்....

தலைப்பில் உள்ள வரிகளுக்காக !!!!